ஈரோடு: தென்னிந்தியாவில் மிகவும் செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டின் 4ஆவது புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது.
ஆயிரத்து 455 சதுர கி.மீ., பரப்பரளவு கொண்ட புலிகள் காப்பகத்தின் தலமலை வனப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தின் மத்தியில் திம்பம், ஆசனூர்-காரப்பள்ளம் வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
தமிழ்நாடு - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவுள்ள மலைப்பாதையில் யானைகள் புலிகள், சிறுத்தை, காட்டெருமை, அரிய வகை புள்ளிமான்கள், கழுதைப்புலி உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி தென்படுகின்றன.
நீர் உணவு தேடி வனவிலங்குகள் சாலையைக் கடக்கும் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கின்றன. அண்மையில் தாளவாடி, திம்பம், ஆசனூரில் சிறுத்தை சாலையைக் கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தன.
சத்தியமங்லகம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் வனத்தின் சூழல் தன்மையைத் தொடரவும் தமிழ்நாடு - கர்நாடகாவை இணைக்கும் திம்பம் மலைச்சாலையில் இரவுப் போக்குவரத்தைத் தடை செய்யும் வகையில், 2019ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை அமல்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக மக்கள் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான கருத்துக்கேட்புக்கூட்டம் பிப். 9ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று 2019ஆம் தொடர்ந்த வழக்கில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை வரும் 10ஆம் தேதி அமல்படுத்த வேண்டும் என சென்னை தலைமை உயர் நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஒரே வழக்கில் இரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிக்கல் ஏற்பட்டது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே இருக்கும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துத் தடை விதிப்புக்கு அரசியல் கட்சிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது, 'வன விலங்கு பாதுகாப்பு என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்து இதைப் பார்க்கக் கூடாது.
இரு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள்,தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இதைப்பார்க்க வேண்டும். இரவுப் போக்குவரத்தைத் தடுத்தால், பகல் போக்குவரத்தும் தானாகவே முடங்கும்.
இதுதான் கடந்த காலத்திலும் நடந்தது. வன விலங்குப்பாதுகாப்பை வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்ய வாகனங்களின் வேகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்' எனக் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சர்வதேச அளவில் சாதிக்கத் துடிப்புடன் வேலூர் வீராங்கனை: மனமுள்ளோர் உதவலாம்!