கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியாரின் முழு உருவச் சிலை மீது நேற்றிரவு (ஜூலை 16) சமூகவிரோதிகள் சிலர் காவி பெயிண்ட்டை ஊற்றி அவமதித்தது, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரியப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக பெரியார் திருவுருவச்சிலைக்கு காவி சாயம் பூசி அவமதிப்பு செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு பல அமைப்பை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், தலித் விடுதலைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறமலிருக்க பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.