தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தி, அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்பது குறித்து சுகாதாரத் துறை, அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்கள் வீடு வீடாகச் சென்று வீட்டில் உள்ளவர்களில் யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, அறுவை சிகிச்சை ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளதா என்பது குறித்து 28 நாள்களுக்கு கணக்கெடுத்து அந்த அறிக்கையை சுகாதாரத் துறைக்கு வழங்க வேண்டும்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதியில் 1880 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் பணிபுரியும் தங்களுக்கு முகக்கவசம், கையுறை, கோட், கண்ணாடி ஆகியவற்றுடன் உயிர்ப் பாதுகாப்பு, பணி பாதுகாப்புடன் 50 லட்சம் ரூபாய்க்கு காப்பீடும் வழங்க வேண்டும்.
அதன் பின்னரே, பணிக்குச் செல்வோம் என அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள் கோபிசெட்டிபாளையம் தாலுகா அலுவலகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அரசு தங்களுக்கு உரிய பாதுகாப்பும், காப்பீடும் செய்தால் மட்டுமே பணியில் ஈடுபடப்போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ‘மக்களுக்காக நாங்க இருக்கோம்’- கரோனாவை விரட்டியடிக்கும் தூய்மைக் காவலர்கள்!