ஈரோடு: கருங்கல்பாளையம் காவிரி கரையில் அமைந்துள்ள மின் மயானத்தை ஈரோடு மாநகராட்சியுடன் இணைந்து ஈரோடு ரோட்டரி ஆத்மா மின்மயான அறக்கட்டளை கடந்த 14 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறது. இதன் அடுத்த கட்ட முயற்சியாக கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களின் சிரமத்தைக் குறைக்க புதிய சேவை திட்டத்தை இந்த அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி ஈரோடு மின் மயானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தின் மூலம் ஈரோடு நகரைச் சுற்றியுள்ள சுமார் 60 கி.மீ., சுற்றளவிற்கான மக்களுக்கு கிராமப் பகுதிகளுக்கு நேரில் சென்று இறந்தவர்களின் உடலை பெற்று, தகனம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
விறகு அல்லது சாண வறட்டி மூலம் உடலை தகனம் செய்ய எட்டு மணி நேரமும், 15 ஆயிரம் ரூபாய் வரையும் செலவாகும் நிலையில், இந்த வாகனத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் தகனம் செய்து அஸ்தி வழங்கப்படும் என்றும்; அதேபோன்று கட்டணமாக ரூ.7500 மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முதன்முறையாக ஈரோடு நகரில் அறிமுகம் செய்துள்ள இந்த நடமாடும் எரியூட்டு வாகனத்தை தமிழ்நாடு முழுவதும் மற்ற மாவட்டங்களுக்கும் கிராமப்புற மக்களின் வசதிக்காக விரைவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பைக்கில் 4 பேர் பயணம்: சோசியல் மீடியா புகாருக்கு உடனே ரெஸ்பான்ஸ் செய்தபோலீஸ்