கோபிசெட்டிபாளையம் அருகே மேரி என்ற பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு அதை தடுக்க வந்தவரையும் அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் தப்பிக்க பயன்படுத்திய இருசக்கர வாகன எண்ணை கொண்டு தனிப்படையினர் பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பிரிவு சாலையின் அருகில் தனிப்படையினர் சென்றுகொண்டிருந்தபோது கொலையாளி தப்பிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்னைக் கொண்டு அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கொலையாளி அவர்தான் என்பது உறுதியானது.
மேரியின் கடைசி மகளை (19) அந்தியூர் பர்கூர் மலைப்பகுதி திக்கையூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் (30) கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து அவர் மேரியிடம் பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் மேரி பெண் தர மறுத்து கடந்த ஒரு ஆண்டாக தனது மகளை பார்க்க முருகனை அனுமதிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் மேரியை கொலை செய்ய திட்டமிட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனைத்தொடந்து கொலைக்கு பயன்படுத்திய இரு இருசக்கர வாகனங்களையும் அரிவாளையும் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட முருகனை கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...'புகாரா கொடுக்குற...' கொலை வெறியோடு அரிவாளுடன் விரட்டிய நபர்!