ஈரோட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டின் பொருளாதாரம் பின்தங்கியுள்ளது. படித்தவர்களுக்கு வேலையில்லாத நிலையில், அதனை மறைப்பதற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நேற்று தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அதிக நேரம் நிறைய பேசியுள்ளார். ஆனால் இந்த பட்ஜெட் யாருக்கும் நிறைவானதாக இல்லை.
நடப்பு பட்ஜெட்டில் சேமிப்புக்கான ஊக்கத் தொகையை நீக்கியிருப்பது மக்களிடம் சேமிக்கும் எண்ணத்தை தடுப்பதாக உள்ளது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக மத்திய அரசு மாற்றிவருகிறது" என்றார்.
மேலும், பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியது குறித்து ஈ.ஆர். ஈஸ்வரன், பட்ஜெட் வாசிப்பில் திருக்குறள் பேசினால் மட்டும் நாட்டில் பாலும் தேனும் ஓடாது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ.வை எதிர்த்தால் அதிமுக சிறைக்குச் செல்ல வேண்டும்' - திமுக தலைவர் ஸ்டாலின்