ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணிமனையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூர் வழிதடத்தில் ஒன்பது பேருந்துகளும் கொள்ளேகால் வழித்தடத்தில் இரண்டு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல், கர்நாடகத்திலிருந்து ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30 கர்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கரோனா தொற்று காரணமாக கர்நாடகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், கர்நாடக பயணிகளின் வருகையைக் குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு கர்நாடக இடையே மைசூரு, கொள்ளேகால் வழித்தடத்தில் இயக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் நேற்று முதல் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டன.
கர்நாடக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் கர்நாடக பேருந்துகளும் ரத்துசெய்யப்பட்டன. இதனால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்சமயம், தனியார் பேருந்துகள், வாடகை வேன்கள் மட்டுமே கர்நாடகத்துக்கு இயக்கப்படுகின்றன.
வனச்சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் 30 கிமீ வேகத்துக்கு குறைவாகச் செல்ல வேண்டும் என வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், வழக்கம்போல் இயங்கிவரும் உள்ளூர் பேருந்துகளில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: கர்நாடகப் பயணிகள் தாளவாடியில் தங்க ஆட்சியர் ஏற்பாடு