ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கள்ளுக்கடைமேடு பகுதியில் சாலையோர மர நிழலில் மக்களை அமர வைத்து, அவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர், பள்ளி ஆசிரியர் போல் கரும்பலகையில் பால் விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து மக்களுக்கு விளக்கினார்.
அதன்பின்னர், பொதுமக்கள் மத்தியில் பேசிய செல்லூர் ராஜூ, ”ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போன்று இதுவரை நான் ஒரு தேர்தலை கூட பார்க்கவில்லை. இந்த தேர்தலை பார்க்க அதிசயமாக உள்ளது. தலைமைச் செயலகத்துக்கு சென்றால் கூட பார்க்க முடியாத அமைச்சர்கள் அனைவரும் காரில் பவனி வருகிறார்கள். தற்போது அவர்களை எளிதாகப் பார்க்க முடிகிறது.
ஈரோடு மக்கள் அன்பானவர்கள், பாசமானவர்கள். கோபப்பட்டால் கூட அன்பாக பதில் சொல்லக்கூடியவர்கள். நீங்கள் அதிமுகவுக்கு ஓட்டு போடத் தயாராகி விட்டீர்கள். நேற்று ஈரோடு பிரசாரத்தில் கமல்ஹாசன் இந்திய தேசத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அப்படி என்ன அச்சுறுத்தல் வந்துவிட்டது? பாகிஸ்தான் நம் மீது படையா எடுக்கப்போகிறது. கமல்ஹாசன் நல்ல நடிகர். அவர் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்துள்ளேன். அந்தப் படத்தில் நன்றாக நடித்துள்ளார்.
ஆனால், சினிமா வேறு; அரசியல் வேறு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோராலும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. கமல்ஹாசன் சினிமாவில் கால்ஷீட் கொடுப்பது போல், ஒருநாள் பிரசாரத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். நடிகர் சிவாஜியே கட்சி தொடங்கி சாதிக்க முடியாத அரசியலில் கமல்ஹாசன் என்ன சாதித்து விடப்போகிறார். சினிமா நடிகர் என்கிற போர்வையில் மக்களை ஏமாற்றுகிறார். அதிமுக ஆட்சி செய்த 31 ஆண்டுகாலத்தில் மக்கள் மீது எந்த ஒரு வரியும் திணிக்கவில்லை.
திமுக ஆட்சி ஏற்றதும் சொத்துவரி, மின் கட்டணம், பால் விலையினை உயர்த்திவிட்டது. விடியா திமுக ஆட்சியால் நீங்கள் தவித்து வருகிறீர்கள். தவறானவர்களிடம் ஆட்சியை கொடுத்ததால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அதிமுகவின் பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்திவிட்டனர். கரோனா காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்து நின்றது. அப்போது ஆற்றல் மிகுந்த எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சென்று மக்களை சந்தித்தார்.
பல்வேறு நடவடிக்கையால் கரோனா கட்டுக்குள் வந்தது. ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரோனா காலகட்டத்தில் வீடியோ கால் மூலம் மக்களை சந்தித்துப் பேசினார். எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் திமுகவினருக்கு தகுந்த பாடம் புகட்டி அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும்'' எனப் பேசினார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் வாக்காளர்களை அடைத்து வைத்து உதயநிதி படம் திரையிடப்படுவதாக அண்ணாமலை புகார்!