பவானி அருகே ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு 10 ஆண்டுகளே ஆன ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அவல நிலையில் உள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் அச்சத்தில் இருக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.
![Government School Damage In Erode](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4713415_erd-1.bmp)
இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.கடந்த 2009ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் சமுதாய பங்கேற்பு உதவியுடன் அரசு மானியம் ரூ.10 லட்சம் ரூபாய் செலவில் மூன்று வகுப்பு கட்டடம் கட்டி 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றது.மேலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூன்று லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக் கட்டடம் புனரமைப்பு செய்யப்பட்டது.
பள்ளியின் கட்டடங்கள் அங்கங்கே விரிசல் ஏற்பட்டு, மேற்கூரையின் இரும்பு கம்பிகள் வெளியில் துருத்தி இடிந்துவிழும் நிலையில் உள்ளது.கட்டடடம் தரமான பொருட்களைக் கொண்டு கட்டப்படாததால் நீடித்து நிலைக்க வேண்டிய கட்டடம் இங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் பள்ளியில் கழிப்பறை, சமையல் கூடம், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வருவதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப அச்சப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அனைவரும் அரசுப் பள்ளியில் சேர்ந்து பயில வேண்டும் என்று கூறிவரும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
பள்ளியின் கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகும் முன்பு மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக தலையிட்டு பள்ளியை இடித்துவிட்டு தரமான பொருட்களைக் கொண்டு புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'விண்வெளி அறிவியலை பள்ளிக் குழந்தைகள் பயிலுங்கள்' - இஸ்ரோ முன்னாள் முதன்மை இயக்குநர்!