ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த ஜீரஹள்ளி வனப்பகுதி ஜோரகாடு பகுதியைச் சேர்ந்தவர், மாதேவன் (60). விவசாயி. இவருக்கு சிவம்மா என்ற மனைவி, விஜயகுமார், ராஜூ ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தனது விவசாயத் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை கரும்புத்தோட்டத்தில் புகுந்து நாசம் செய்துள்ளது. இது குறித்து ஜீரஹள்ளி வனத்துறைக்குத்தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த வனத்துறையினருடன் விவசாயிகள் யானையை விரட்டினர். யானை வனப்பகுதியில் செல்லாமல் தொடர்ந்து கரும்புக்காட்டில் முகாமிட்டிருந்தபோது, அங்கு காவலுக்கு இருந்த மாதேவனை தாக்கிக்கொன்றது.
இதனையடுத்து, சம்பவயிடத்திற்குச் சென்ற தாளவாடி காவல் துறையினர் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது கிராம மக்கள் மாதேவன் உடலை எடுக்கவிடாமல் தடுத்து வனத்துறை அலுவலரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறை ஊழியர்கள் யானைகளை விரட்டவருவதில்லை எனவும்; கடந்த 2 மாதமாகத் தொடர்ந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் இதற்கு வனத்துறை பொறுப்பேற்க வேண்டும் என வாதிட்டனர். தொடர்ந்து யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.