ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மரகதம் (50), கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இன்று காலை மரகதம் வீட்டிற்கு சென்ற ராஜபாண்டி, நாகராஜன், திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த மணிகண்டன், மோகன் ஆகிய 4 பேரும், தாங்கள் சென்னை தனிப்பிரிவு காவல்துறையினர் என்றும், பத்திரிகை நிருபர்கள் என்றும் கூறி, மரகதம் வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்ததாகவும், அதனை வெளியே தெரிவிக்காமல் இருக்க 4 பேருக்கும் தலா ரூ 2,000 அளிக்க வேண்டுமெனவும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, மரகதம் அவரது சகோதரர் பழனிச்சாமி தரப்பினருக்கும், போலி நபர்களுக்குமிடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில், போலி நிருபர்கள் எனக் கூறி பணம் பறிக்க முயன்ற ராஜபாண்டி, நாகராஜன், திருமுருகன்பூண்டியை சேர்ந்த மணிகண்டன், மோகன் ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கஞ்சா வியாபாரி மரகதம், அவரது சகோதரர் பழனிச்சாமி, மற்றும் போலி நிருபர்கள் எனக் கூறி பணம் பறிக்க முயன்ற மூவரை கைது செய்தனர். மேலும் நாகராஜன் தப்பியோடியதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.