ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சாலையில் கரும்பு லாரிகள் அதிக அளவில் சென்றுவருகின்றன.
இவ்வழியாக வரும் கரும்பு லாரிகள், எடை அதிகரிப்புக் காரணமாகக் கரும்புகளை ஆங்காங்கே வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனைக் கண்ட யானைகள், சில நாள்களாக இரவு நேரங்களில் கரும்புக்காக சாலையில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், இன்று இரவு ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் ஒரு யானை தனது குட்டியுடன் உலாவிக்கொண்டிருந்தது. அப்போது, சாலையில் செல்லும் வாகனங்களைத் துரத்தி வாகன ஓட்டிகளை பீதியடைய செய்தது. பின்னர், யானையின் அருகே சென்று நின்ற ஒரு காரை துரத்திய யானை, காரின் முன்பக்கம் முட்டி நின்றது.
காரில் சென்றவர்கள், காரை பின்புறமாக நகர்த்தி லாவகமாகத் தப்பித்தனர். மலைப்பாதையில் யானைகள் வாகனங்களைத் துரத்துவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
வாகன ஓட்டிகள் யானைகளின் அருகே செல்வதும் புகைப்படம் எடுப்பதும் யானையை துன்புறுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் சாலையில் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் வனத் துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: துரத்திய கொம்பன் - பயத்தில் மரத்தில் ஏறிய வன அலுவலர்!