ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியில் உள்ள பாலவிநாயகர் கோயில் வீதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணராஜ் (74). இவரது மனைவி ரத்தினம் (71). இவர்கள் இவர்களது மூன்று பெண் குழந்தைகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனியாக கைத்தறி நெசவு வேலை செய்து குடும்பத்தை நடத்திவந்தனர். இந்நிலையில், இவர்கள் பணிபுரிந்த நிறுவனமும் செயல்படாமல் போனதால், உணவிற்கே மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில், இவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு 9 மணி ஆகியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவைத் தட்டி பார்த்தும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தம்பதியினர் இறந்த நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த காவலர்கள் இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில், வேலையில்லாமல் தவித்துவந்த தம்பதியினர் இருவரையும் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத காரணத்தால், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.