ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம் ஆகிய இரு கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ராஜன் நகர் கஸ்தூரிபா அரசு நிதி உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்குக் கல்வி பயிலத் தினந்தோறும் அரசுப் பேருந்தில் சென்றுவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகப் பள்ளி நேரத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து மேற்கண்ட இரு கிராமங்களுக்கும் இயக்கப்படாத நிலை இருந்துவந்தது. இதனையடுத்து, இந்த இரு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று பள்ளிக்குப் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்காததால் இன்று பவானிசாகர் - பண்ணாரி சாலையில் புதுப்பீர்கடவு பிரிவு பேருந்து நிறுத்தத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![பள்ளி நேரத்தில் பேருந்து இயக்க கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-02a-sathy-student-salai-marial-photo-tn10009_25022022155310_2502f_1645784590_30.jpg)
இது குறித்து தகவலறிந்த பவானிசாகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்துக் கழக அலுவலர்களிடம் அலுவலர்களிடம் பேசி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலைந்துசென்றனர். இதனால் பவானிசாகர் பண்ணாரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
![சரியாக இயக்கப்படாத அரசு பேருந்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14570412_155_14570412_1645799856926.png)
இதையும் படிங்க: ஜெயக்குமாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி