ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பவானி ஆகிய தாலுக்காக்களிலிருந்து அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முதலில் கடந்த மாதக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என அலுவலர்களிடம் கோட்டாட்சியர் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கபடாத பிரச்னைகள் குறித்து ஆலோனையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோட்டாட்சியரிடம், கொப்பு வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு, குளங்கள் ஆக்கிரமிப்பு, பாசன வாய்கால்களிலிருந்து விடப்படும் தண்ணீர் பற்றாக்குறை, கடைமடைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள், குடிமராமத்து பணிகள் செய்யப்படாமல் உள்ள ஏரி குளங்களை தூர் வாருதல் போன்ற ஏராளமான புகார்களை விவசாயிகள் தெரிவித்தனர்.
புகார்கள் அனைத்தையும் உடனடியாக சரிசெய்யவேண்டும் எனவும், குண்டேரிப்பள்ளம் அணையை தூர் வார வனத்துறையினரிடம் ஆலோசனை பெற்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரம் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு பதிலளிக்காத அலுவலர்களையும் கண்டித்தார்.
இதையும் படிங்க: 'நம்ம வீட்டுப் பிள்ளை' மீரா மிதுனின் 'அக்னிச் சிறகுகள்' உடைப்பு!