ஈரோடு மாவட்ட மக்களின் முக்கியப் பொழுதுபோக்கு அம்சமாக பவானிசாகர் அணைப்பூங்கா திகழ்கிறது. திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இந்தப் பூங்காவை கண்டு களித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு நோய் தடுப்பு விதிகளைப் பின்பற்றி கடந்த 14ஆம் தேதி அணைப்பூங்கா திறக்க அனுமதியளித்தது.
அதன்படி முதலில் 500 பேர் வரை வந்த வண்ணம் இருந்த நிலையில், விடுமுறை நாள்களில் 1,500 பேர் வரை அணைப் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 93 அடியாக உள்ளதால் நீர்த்தேக்கப்பகுதி கடல் போல காட்சியளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இளைப்பாற நீர்த்தேக்கப் பகுதியில் அமர்ந்து அணை நீரை பார்த்து ரசிக்கின்றனர். சிலர் குடும்பம் குடும்பமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
ஆர்வத்துடன் சிலர் குழந்தைகளுடன் அணைப் படிக்கட்டுகளில் இறங்கி நீரில் நின்று செல்பி எடுக்கின்றனர். இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி நீர்த்தேக்கத்தில் முதலைகள் உலா வருவது தெரியாமல் குழந்தைகளுடன் படம் எடுப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பாதுகாப்பு இல்லாத பகுதியில் இறங்கி புகைப்படம் எடுப்பதை பொதுப்பணித்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’ஜெயலலிதா எப்படி இறந்தார் என எடப்பாடி பழனிசாமி இந்தப்பக்கம் வந்தால் கேளுங்கள்’ - உதயநிதி பளீர்