ஈரோடு காந்திஜி சாலையில் செயல்பட்டுவந்த தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் நேரடி ஆய்வுக்குப் பிறகு தபால் நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
இதனிடையே தபால் நிலையத்தில் தபால் பிரிவு, முத்திரைத் தாள் விற்பனைப் பிரிவு, வங்கி சேமிப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து வகைப் பிரிவுகளிலும் பணியாற்றிய 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை முகாம் தபால் நிலைய வளாகத்தில் இன்று ( ஜூலை 3) நடைபெற்றது. தகுந்த இடைவெளியுடன் ஊழியர்கள் அமர்த்தி வைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பரிசோதனைக்குப் பிறகு ஊழியர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு நோய்ப்பரவாமல் தடுப்பதற்குரிய முயற்சிக்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று மருத்துவக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
மேலும் தபால் நிலையத்திற்கு கடந்த மூன்று நாள்களாக வந்து சென்ற வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் வரவழைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தபால் நிலையத்திற்கு வந்து சென்றவர்கள் யாரேனும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுபட்டிருந்தால் தயவுகூர்ந்து தங்களை மருத்துவப் பரிசோதனை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.