கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று (மே 10) முதல் வரும் 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசியத் தேவைக்கான கடைகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டு தற்போது 12 மணியிலிருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கின்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள 13 நிலையான சோதனை சாவடிகளில் காவல் துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் தற்காலிகமாக 42 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இரண்டு ஏடிஎஸ்பி, 9 டிஎஸ்பிக்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பூங்கா , காளைமாடு சிலை, மணிக்கூண்டு, பஸ் நிலையம், ஸ்வஸ்திக்கார்னர், மேட்டூர் ரோடு ,ஜி எச் ரவுண்டானா, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் என மக்களுக்கு அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய ஒரு சிலரை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அதேசமயம் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்பவர்கள் காவல் துறையினர் அனுமதித்து வருகின்றனர். இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடிகளில் காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன. இதேபோல் பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, பண்ணாரி சோதனைச்சாவடி, தாளவாடி மாநில எல்லை சோதனை சாவடிகளில் செல்லும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. முழு ஊரடங்கி மீறியும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நபர்களை தேவையில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.