ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள அந்தியூர் பிரிவில் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பாவடி நிலத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பாவடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் கற்கலை ஊன்றி அச்சமூகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், பாவடி நிலத்தில் நெடுஞ்சாலை துறைக்கும் இடம் உள்ளது என்று கூறி, கடந்த 23ஆம் தேதி காவல் துறையினர் மூலமாக பாவடி நிலத்தில் சாலையை ஒட்டியுள்ள கற்களை மட்டும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றியுள்ளனர். இதனையடுத்து, பிரச்னைக்குரிய பாவடி நிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அந்த சமூகத்தினர் நேற்று இரவு மேற்கூரை அமைக்க சென்றுள்ளனர்.
இதனைத் தடுத்த பவானி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சேகருக்கும், கோயிலுக்கு மேற்கூரை அமைக்க வந்த சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் காவல் துணைக் கண்காணிப்பாளரை அந்த சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உதயசங்கர் என்பவர் தனது செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்தியுள்ளார். இதனைக் கண்ட துணைக் கண்காணிப்பாளர் செல்ஃபோனைப் பறித்ததுடன் அந்த நபரை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், வழக்கறிஞரை தாக்கியதுடன் அவர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறி 50-க்கும் மேற்பட்டோர் பிரச்னைக்குரிய பாவடி நிலத்தில் கருப்புக் கொடியை கட்டியும் கையில் கருப்புக் கொடியை ஏந்தியும் ஊர்வலமாக சென்று பவானி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் உள்ள நெசவாளர்கள் பயன்படுத்திவந்த பாவடி நிலங்கள் அவர்களுக்குச் சொந்தம் என்று அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பிரச்னை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என சமாதானம் செய்து அச்சமூகத்தினரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க : முப்படை தலைமைத் தளபதி பதவி சாதகமா? பாதகமா?