கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (33). பிக்கப் வேன் ஓட்டுநர். இவரின் மனைவி திவ்யா (26), மகன் சமர்த் (3). இந்நிலையில், ரவி தனது மனைவி, மகனுடன் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் செல்வதற்காக பவானிசாகர் பண்ணாரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
ராஜன்நகர் அடுத்துள்ள பத்ரகாளியம்மன் கோயில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரவி தலையில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நல்வாய்ப்பாக உயிர்தப்பிய திவ்யா, சமர்த் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். மனைவி கண்முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.