ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்காக கடந்த 16ஆம் தேதி முதல்கட்டமாக 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கால்வாயில் நேற்று 2,300 கனஅடியாக திறந்துவிடப்பட்டது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி சென்றது.
124 மைல் நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்காலில், சத்தியமங்கலம் உக்கரம் 11ஆவது மைல் என்ற வாய்க்காலின் மண்கரையில் ஏற்பட்ட சிறு துவாரத்திலிருந்து தண்ணீர் வெளியேறி கரைக்கு மறுபுறம் உள்ள பொன்னுச்சாமி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது.
பின்னர், அவ்வழியாக சென்ற விவசாயிகள், மண்கரையில் தண்ணீர் கசிவதைப் பார்த்து பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பொதுப்பணித் துறையினர் வாய்கால் நீர் கரைபுரண்டோடுவதைப் பார்த்து தண்ணீர் திறப்பை 1000 கனஅடி குறைக்குமாறு பவானிசாகர் அணை நிர்வாகத்திடம் அறிவுறுத்தியது. இதனையடுத்து, தண்ணீர் திறந்துவிடும் அளவை 2,300 கனஅடியில் இருந்து 1000 கஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வாய்க்காலில் தண்ணீர் அளவு பாதியாக குறைந்ததால் தண்ணீர் கசிவு நின்றது. வாய்க்கால் கரை மண் அரிப்பைத் தடுப்பதற்கு தற்காலிகமாக செம்மண் கொட்டியும், கரையில் உள்ள துவாரங்களை அடைத்தும் வாய்க்கால் கரையை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வாய்க்கால் கரை பலப்படுத்திய பின்னரே, நீரின் அளவு 1000 கனஅடியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.