தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் நடுநிலைப் பள்ளியில் 85 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். இப்பள்ளியில் இயற்கை வேளாண்மை குறித்து மட்டுமே பயிற்சி அளித்துவருவதுடன் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிது நிலம் ஒதுக்கப்பட்டு அதில் அவர்களே விவசாயமும் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இயற்கை வேளாண்மை குறித்தும், விவசாயிகளின் பயன்கள் குறித்தும் மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு மிதிவண்டிப் பயணம் ஒன்றை பள்ளி சார்பாக ஏற்பாடு செய்துள்ளனர். இப்பயணம் தருமபுரியில் தொடங்கி மேட்டூர், அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் வரை செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வுப் பயணத்தில் 15 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயணத்தை தொடங்கியுள்ளனர். இப்பயணம் 18ஆம் தேதி தொடங்கி இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுக்கரைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அருணாசலம் என்ற இயற்கை வேளாண்மை முன்னோடி விவசாயி தோட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். அங்கு மாணவ மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இயற்கை விவசாயி அருணாசலம் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும், இயற்கை வேளாண்மைக்கு தேவையான மூலப்பொருள்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
அவரது பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகள், அதிலிருந்து கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு மீன்வளர்ப்பு, மீனிலிருந்து வரும் கழிவுகள், பயிர்களுக்கு என ஒவ்வொரு செயல்களையும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
இப்பயணம் குறித்து மாணவர்கள் கூறுகையில், தங்களது மிதிவண்டிப்பயண நோக்கமே இயற்கை குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மேற்கொண்டுள்ளதாகவும், இயற்கையை மனித அழிவிலிருந்து மீட்டெடுக்க இப்பயணத்தை மிதிவண்டியில் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
காற்றை மாசுபடுத்தாத இப்பயணத்தில் மேட்டுப்பாளையம் வரை சென்று விவசாயிகளை சந்தித்து பல்வேறு தகவல்களைச் சேகரிக்கவுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி பரிமாற்றத் திட்டம் - மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு