ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள டி.என்.பாளையத்தில் இரண்டுமுறை தடைபட்டு, மூன்றாவது முறையாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாகத் தேர்தல் அலுவலர் அறிவித்தார். அதனால் திமுகவினர் கோபி-சத்தி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை 'அமைச்சர் செங்கோட்டையனின் அத்துமீறல்' என்ற தலைப்பில் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுவரொட்டிகள் திமுக ஒன்றியச்செயலாளர் சிவபாலன் தலைமையில் ஒட்டப்பட்டது. தகவலறிந்த அதிமுக கட்சி நிர்வாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கந்தசாமி, தொண்டர்களுடன் சென்று சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தனர்.
அதனால் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கந்தசாமி, தனது கார் கண்ணாடி திமுக கட்சியினர் உடைத்து நொறுக்கி தன் மீது தாக்குதல் நடத்தியதாகப் பங்களாபுதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர், கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: காலையில் அதிமுக அணி... மாலையில் திமுக அணி!