திண்டுக்கல்: சாணார்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில், 9 சார்பு ஆய்வாளர்கள் தரப்பில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் ரூ.10.46 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம், சாணார்பட்டி காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் பெண் தலைமைக் காவலர் கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நத்தம் காவல் நிலையத்திற்கு அயல் பணிக்காக தலைமைக்காவலர் கீதா சென்றுள்ளார். மேலும் அபராதத் தொகையான ரூ.10.46 லட்சத்தை, முதல் நிலை காவலரான கர்ணன் என்பவரிடம் சார்பு ஆய்வாளர் பொன் குணசேகரன் முன்னிலையில் ஒப்படைத்து சென்றுள்ளார்.
ஆனால், அந்தப் பணத்தை கையாடல் செய்த கர்ணன், கடந்த அக்.25ஆம் தேதி முதல் முன்னறிவிப்பு இல்லாமல் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வினோத், விசாரணை மேற்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதல் நிலை காவலரான கர்ணனை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தர்மபுரி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: நால்வர் கைது