திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். சத்திரப்பட்டியின் ரயில்வே கேட்டில் இருந்து தெற்கு பக்கம் செல்லும் வழியில் ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் நிறைந்த இராப்பூத்தா (இரவில் பூக்கும் மரம்) மரம் உள்ளது.
இம்மரத்தின் பூக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் மற்றும் மிகுந்த வாசனை உடையது. இந்த வாசனையானது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வீசுமென இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இம்மரம் தெய்வீக தன்மை உடையதால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வந்து தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கி பல்வேறு பிரார்த்தனை செய்வதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இம்மரம் தமிழ்நாட்டில் சத்திரப்பட்டி பகுதியில் மட்டும் காணப்படுவதால் அதிசய மரம் என அழைக்கப்படுகிறது.
மேலும், இப்பகுதியில் எடுத்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். விக்ரம் - திரிஷா நடித்த சாமி, சரத்குமார் - நயன்தாரா நடித்த அய்யா ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம் அதில் உள்ள தெய்வீக சக்தி எனவும் கூறுகின்றனர்.
இம்மரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்திரப்பட்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : கரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - ஆட்சியர் ராமன்