திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை கால்நடைச் சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு திண்டுக்கல் சுற்றுப்புறங்களில் உள்ள வெள்ளோடு, கொடைரோடு, நிலக்கோட்டை, நத்தம் கோபால்பட்டி, சாணார்பட்டி, வடமதுரை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள், கோழிகள் போன்றவை விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில் வருகின்ற 21ஆம் தேதி பக்ரீத், ஆடி 18 ஆகிய பண்டிகை நாள்கள் வருகின்றன. இதனால் இன்று (ஜூலை 19) அதிக அளவில் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் போன்றவை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
எடையைப் பொறுத்து விற்பனை
இவற்றை வாங்க அதிக அளவு மக்கள் சந்தைகளில் குவிந்ததால், கடந்த வாரத்தைவிட அதிக விலைக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆட்டின் எடையைப் பொறுத்து, ஒரு ஆடு சுமார் ஐந்தாயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்வரை விற்பனைசெய்யப்பட்டது.
குறிப்பாக வெள்ளாடுகளில், கறுப்பு நிற ஆடுகளை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கிச் சென்றனர்.
வியாபாரிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மகிழ்ச்சி
இதனால் எப்போதும் இல்லாத அளவிற்குச் சந்தையில் அதிகபட்சமாக 80 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. ஒரேநாளில் ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானதால், விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ’ஆவின் இயக்குநர்களுக்கான தேர்தலை நடத்தக் கூடாது’ - நீதிமன்றம் உத்தரவு