'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளவில் பெயர் பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு சுற்றுலாப்பயணிகளைச் சார்ந்து தான் வாழ்வாதாரம் உள்ளது.

இந்நிலையில் கரோனாவால் சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள பலரும் கடந்தாண்டு மிகவும் சிரமப்பட்டனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டமாகத் தளர்வுகள் அறிவித்த பின்னரும் கொடைக்கானல் போன்ற மலைவாழ் தலங்களுக்குச் செல்ல இ - பாஸ் முறை கட்டாயப்படுத்தப்பட்டது.
இ-பாஸ் முறைகளில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வந்ததால், அதனை ரத்து செய்ய வேண்டுமென உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப்பயணிகளும் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் இ-பாஸ் முறையை ரத்து செய்து, இ-ரிஜிஸ்டரேசன் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இதிலும் பல குழப்பங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பண்டிகை காலங்களில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். ஆனால், கரோனா பரவலுக்குப் பின்னர் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வியாபாரி அப்பாஸ்,'மற்ற சுற்றுலாத் தலங்களுக்கு இ - பாஸ், இ - பதிவு முறையை ரத்து செய்தது போலவே, கொடைக்கானலிலும் ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இ-பதிவு முறையை விரைந்து ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க:வேலூர் ஈமச்சின்னங்கள் பாதுகாக்கப்படுமா?