திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 25ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகம் நடந்துமுடிந்த 3 நாள்களிலேயே ஜனவரி 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கவுள்ளது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற வேண்டிய மண்டல பூஜையானது, கும்பாபிஷேக தினமான அன்று ஒரு நாள் மட்டும் நடத்தப்பட்டு நிறைவு செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி கோயில் கும்பாபிஷேகம் ஆகம விதிகளை மீறி நடைபெறுவதாக குற்றம்சாட்டி, இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் பழனி கோயில் இணை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, “16 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற வேண்டிய மண்டல பூஜையை ஒரே நாளில் நடத்துவதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது.
மண்டல பூஜை நடைபெறும்போது கோயிலில் திருவிழாக்கள் நடைபெறக்கூடாது. ஆனால், தைப்பூசத் திருவிழாவின் போது கும்பாபிஷேகத்தை நடத்தி மண்டல பூஜையையும் நடக்காமல் இருப்பது அரசு மற்றும் நாட்டிற்கு கேடாக அமையும். எனவே தைப்பூசம் திருவிழா முடிந்த பிறகு கும்பாபிஷேகத்தை நடத்திக் கொள்ளுமாறு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்துவது தொடர்பாகவும் தற்போது பிரச்னைகள் எழுந்துள்ளது. மலைக்கோவில் பிரகாரங்களில் உள்ள கோயில்கள் மற்றும் சிதிலமடைந்த பதுமைகள், சிலைகள் ஆகியவற்றை முறையாக சீரமைக்காமலும் கோயில் தீர்த்தமான குரா தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளத்தையும் சரி செய்யாமலும் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது