சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் கடந்த 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசார் விசாரணக்கு அழைத்து செல்லபட்டார். அதன் பிறகு அவரை காணவில்லை. இதற்கிடையில் தருமபுரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நிலுவையில் இருத்த வழக்கில் அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடபட்டன.
இந்நிலையில், தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதால் 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி அர்ஜூனனின் மகன் சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை தாக்கல் செய்த அர்ஜூனனின் இறப்பு சான்றிதழ் சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதால், அவர் இயற்கையாக மரணமடைந்தாரா? அல்லது காவல்துறையினர் தாக்கி மரணமடைந்தாரா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? - நீதிமன்றம் கேள்வி! - CONSUMER GRIEVANCE COMMISSION CASE
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 30 ஆண்டுகளுக்கு பிறகு இதுகுறித்து விசாரணை நடத்த முடியாது எனவும், காவல்துறையினர் தாக்கி தான் மரணமடைந்தார் என்பது தொடர்பாக எந்த புகாரும் இல்லை, எந்த குற்ற வழக்குப் பதிவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுனனின் மரணம் குறித்து விசாரிக்க முடியாது. 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.