திண்டுக்கல்: பழனி அருகே தாழையூத்து ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சிகளை பார்வையிட்டார்
பின்னர் இலவச வீட்டு மனைப்பட்டா, பயிர்க்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், வேளாண்மை துறை சார்பில் வேளாண் கருவிகள், புதிய குடும்ப அட்டைகள் என மூன்று கோடி மதிப்பில் 900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர், திருப்பதி கோயில் போல் பழனி முருகன் கோயிலை மேம்படுத்தும் திட்டத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இன்னும் பத்து ஆண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழ்நாடாக மாற்றும் முதலமைச்சரின் கனவு திட்டம் நிறைவேறும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஆட்சியர் விசாகன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு