திண்டுக்கல் காந்திகிராமம் அருகே அம்பாத்துரை ரயில் நிலையம் அமைந்துள்ளது. மதுரை - திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் -மதுரை மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் அம்பாத்துரை நிலையத்தை கடந்து செல்கிறது.
அம்பாத்துரை ரயில் நிலையத்தின் கேட் அடைக்கப்பட்டால் காந்திகிராமம், தொப்பம்பட்டி, எர்நாகம்பட்டி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் பாதையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ரயில் கடந்து சென்ற பிறகும் மூடப்பட்ட கேட்டை திறப்பதற்கு 5-மணி நேரத்திற்கும் மேலாக ஆவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடிவதில்லை, சிறுமலை அடிவாரப்பகுதிகளில் விளையும் விளைபொருட்களை கொண்டு செல்லவும் முடிவதில்லை. எனவே ரயில்வே கேட்டை திறப்பதற்கும், ரயில் வரும்போதும் கேட்டை மூடுவதற்கும் நிரந்தரமாகப் பணியாளர் இருந்தால் பொதுமக்களுக்கு சிரமம் இருக்காது எனக் கூறுகின்றனர்.
தொடர்ந்து கிராம மக்கள் தங்களின் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வுகாண வழியில்லாமல் அம்பாத்துரை ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்றனர். தகவலறிந்து வந்த அம்பாத்துரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மாதவராஜா முறையான பதில் அளிக்காததால் பொதுமக்களுக்கும் அவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் மதுரையில் இருந்து சென்னை சென்ற தேஜஸ் ரயிலை மறிக்க தண்டவாளத்தில் கூடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் தேஜஸ் ரயில் வந்ததும் பொதுமக்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் மதுரையில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் கொடைரோடு ரயில்நிலையம் அருகிலும் ஈரோட்டிலிருந்து நெல்லை வரை செல்லும் பாசஞ்சர் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 'புள்ளிங்கோ' கெட்டப்பில் அசத்தும் ரம்யா பாண்டியன்!