திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் கிராம பகுதிகளில் உள்ள பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுதிறனாளிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க செயல் அலுவலர் தங்கபாண்டி கலந்துகொண்டு இந்தத் திட்டம் குறித்து விளக்கமளித்தார். அப்போது, கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி அதற்காக வங்கிகளில் கடன் பெற்று தந்து வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.
மேலும், "இந்தத் திட்டத்தின்கீழ், ஆறு பேர் கொண்ட குழு அமைத்து அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரங்களை தனி மொபைல் செயலி மூலம் பதிவுசெய்து, அவர்களுக்குத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பல்வேறு உதவிகள் செய்யப்படும்" என்றார்.
இந்தப் பயிற்சி கூட்டத்தில் ஒன்றிய துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா, கிராம ஊராட்சி அலுவலர் ஏழுமலை, தமிழ்நாடு ஊரக புத்தாக்க வட்டார அணித் தலைவர் ஜெயபாண்டியன், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.