திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை கரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சீனிவாசன் பேசும்போது, "திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் அரசு தலைமை மருத்துவமனையில் தனி கட்டிடம் தயாராக உள்ளது. கரோனா வைரஸ் என்பது வெளிநாட்டில் இருந்து வந்தது. இதனைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதேபோல் காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு கையுறை பாதுகாப்பு கவசம் கொடுக்கப்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுபடுத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்த 2,270 பேரில் 884 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். வீட்டில் இருந்தால் வெற்றி நிச்சயம், இல்லை என்றால் வெளிநாட்டில் ஏற்பட்ட இழப்பு தான் இங்கு ஏற்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: காய்ச்சலால் பெண் உயிரிழப்பு: பீதியில் ஊர் மக்கள்!