திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடியைச் சேர்ந்த மணியன்-தங்கம் ஆகியோரின் மகள் மங்கையர்க்கரசி (29). இவரும், இவரது உறவினரான அபீஷ்குமார்(24) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் சகோதர உறவு முறை எனக் கூறி, மங்கையர்க்கரசியின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் மங்கையர்க்கரசி கர்ப்பம் தரித்துள்ளார். இது குறித்து அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மங்கையர்க்கரசிக்கு கடந்த 20ஆம் தேதி வீட்டிலேயே வைத்து, அவரது பெற்றோர் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, பிறந்த ஆண் குழந்தையை அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர்.
இதற்கிடையே, மங்கையர்க்கரசியின் உடல்நிலை மோசமாகவே, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விசாரணை செய்த ஆயக்குடி காவல் துறையினர் மங்கையர்க்கரசியின் பெற்றோர்,அக்கா, தம்பி காளிதாஸ் மற்றும் காதலன் அபீஷ்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், முரளிகுமார் ஆகியோர் இன்று(ஏப்.28) விசாரணை நடத்தினர். ஆயக்குடியில் உள்ள சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆணைய உறுப்பினர்கள் பழனி, சார் ஆட்சியர் அலவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த காவல் துறையினருக்குப் பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த விசாரணையின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, குழந்தைகள் பாதுகாப்பு காவல் ஆய்வாளர் செந்தாமரை, ஆயக்குடி காவல்நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.