திண்டுக்கல், போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி சிக்னல் அருகே உள்ள டாக்ஸி ஸ்டாண்டில் ஓட்டுநராக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் வசிக்கும் வீட்டின் அருகேயுள்ள குறுகலான சாலைப் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இதை டாக்ஸி டிரைவரான முருகன் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறந்ததை அடுத்து இளைஞர்கள் மது அருந்திவிட்டு முருகனிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மது அருந்திய இளைஞர்கள் முருகனை கட்டை, தடியால் பலமாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த முருகன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முருகன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து நகர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகனை, தாக்கி கொலை செய்த இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மரணத்தில் முடிந்த டிக்டாக் தகராறு!