திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவருபவர்கள் சுப்புலட்சுமி - கணேசன் தம்பதி.
இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வடமதுரையில் உள்ள அம்பலகாரன்பட்டி கிராமத்தில் குடியிருந்தபோது ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அலுவலர் பழனிச்சாமி அருகில் குடியிருந்து உறவினர்போல் பழகிவந்துள்ளார்.
பின்பு பணியின் காரணமாக ஒட்டன்சத்திரத்திற்கு இடம்பெயர்ந்த சுப்புலட்சுமி-கணேசன் தம்பதி, சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட சேமித்துவைத்திருந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை 2019 நவம்பர் 8ஆம் தேதியன்று பழனிச்சாமியிடம் அளித்தனர்.
அப்போது, அவர்களிடம் பழனிச்சாமி, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர ஏற்பாடு செய்வதாகக் கூறி நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகளாகியும் அவர் எதையும் செய்யவில்லை.
பின்னர், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த தம்பதி, அந்தப் பணத்தை திரும்பக் கேட்டபோது தர மறுத்துவந்துள்ளார் பழனிச்சாமி. பின்பு இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சுப்புலட்சுமி.
மேலும் பழனிச்சாமியை தொடர்புகொண்டு பணம் கேட்டபோது உடனே பழனிச்சாமி அவரது குடும்பத்துடன் வந்து தன்னைத் தகாத வார்த்தையில் திட்டியதுடன் தாக்க முற்பட்டதாக மீண்டும் 2020 மே 7ஆம் அன்று சுப்புலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின்பேரில் பழனிச்சாமி, அவரது மனைவி, மகன்கள் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புகாரின் அடிப்படையில் ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அலுவலர் பழனிச்சாமி வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியன் (எ) பாண்டியராஜன் என்பவரின் பாதுகாப்பில் இருந்துவருகிறார்.
காணொலி பதிவு
"வழக்கறிஞர் பாண்டியராஜன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'புகாரைத் திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் கொலை செய்துவிடுவேன்' என மிரட்டிவருகிறார்.
மேலும், எனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே நான் எனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். எனக்கு இந்த உலகில் நியாயம் கிடைக்கப்போவதில்லை" எனக் காணொலி பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்தக் காணொலிப் பதிவு வைரலான நிலையில் நியாயம் கிடைக்காத விரக்தியில் மனமுடைந்த சுப்புலெட்சுமி - கணேசன் தங்களது இல்லத்தில் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
ஆபத்தான நிலையில் அவர்களை அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.