திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்லாங்காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். முருகேசன், அவரது மாமியார் புஷ்பம் ஆகியோர் குடிசையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டு தினத்தை கொண்டாட அருகிலுள்ள தேவாலயத்திற்கு சென்றனர்.
பின்னர், வீட்டில் அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பற்றியதால் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இரண்டு குடிசைகள் முழுமையாக தீக்கிரையாயின. வீட்டிலிருந்த கார், ஒரு பைக், உடைகள், ஆவணங்கள், பணம் ரூ 20,000 உள்பட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். கூத்தம்பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் செல்வேந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கள்ளிமந்தையம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது!