ஊரடங்கு உத்தரவையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சிலர் ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி வெளியே சென்றுவருகின்றனர். காவல் துறையினர் கையெடுத்து கும்பிட்டும், நூதன முறையில் சட்டத்தில் குறிப்பிடப்படாத சில தண்டனைகளை வழங்கியும் அவர்களைக் கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனாலும், ’நீயென்ன சொல்வது நான் என்ன கேட்பது’ என்பதுபோல் மக்களோ தான்தோன்றித்தனமாக வீதிகளில் நடமாடி வருகின்றனர்.
இதனையடுத்து, திண்டுக்கல் காவல் துறையினர் பேனர்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த பேனர்களில் எமதர்மன் எருமை மீது அமர்ந்தது போல் அச்சடிக்கப்பட்டு, ‘ஹவுஸ் ஃபுல் எமலோகத்தில் இடமில்லை, யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திகில் பேனர் மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கொடியது கரோனாவா? மரணமா? இறுதிச் சடங்கா? - உருக வைக்கும் கடைசி நொடிகள்!