திண்டுக்கல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், "ஒன்றிய பா.ஜ.க அரசு தனது அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அமலாக்கத் துறையை வைத்து, எதிரி கட்சிகளைப் பழிவாங்குவது, கட்சிகளை உடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. எதிரி கட்சிகளைப் பலவீனப்படுத்தி தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது.
பாஜகவின் அடுத்த நகர்வு : மேலும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதாக அறிவித்து அதற்கான முயற்சியும் செய்து வருகிறது. இது சாத்தியமே கிடையாது. மக்களிடையே மோதலை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் பழக்கமாக இருக்கிறது. மக்களை மோத விட்டு அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு உள்ள தந்திர முயற்சி தான் இது. தேர்தலின் போது பா.ஜ.க கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? விலைவாசி வியர்வை எவ்வாறு கட்டுப்படுத்த போகிறீர்கள்? 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறியது, கருப்புப் பணத்தை மீட்பது, விவசாயிகளுக்கு இரட்டிப்பு விலை தருவது என்ன ஆயிற்று போன்ற கேள்விகளை மக்கள் அவர்கள் முன்னிலையில் வைக்கின்றனர். ஆனால் பாஜக தலைவர்கள் இதற்குப் பதில் சொல்லாமல் பொய் பிரச்சாரம் மூலம் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.
நாலாந்திர அரசியல்வாதியாக மாறிய தமிழ்நாடு ஆளுநர்: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், கண்டிப்பாக மக்கள் ஒன்றிய பாஜக அரசைத் தோற்கடிப்பார்கள். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து புதிய அணியாக உருவாகியுள்ளது. அதுதான் வெற்றி பெறும். தமிழக ஆளுநர் தனக்குரிய ஆளுநர் பணியை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர் அதற்கு மாறாக நாலாந்தர அரசியல்வாதி போல் செயல்படுகிறார். ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார். தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.
எனவே தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பி உள்ளோம். அவர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஆளுநராக இருப்பது பொருத்தமும் அல்ல சரியும் அல்ல. ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினரின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் அவர் மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தியின் வழக்கில் மேல்முறையீடு செய்து கொள்ள நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. ஆனால் ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை. அடுத்த நாளே அவரது பதவியைப் பறித்தார்கள். அது போல் இதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்” என்று வன்மையாகச் சாடினார்.
இதையும் படிங்க: Rahul Gandhi: ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மீதான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!