திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் தலைமை காவலர் மகேஸ்வரி. இவர் தற்போது திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மகேஸ்வரி நேற்று (ஆக. 21) பணியில் இருந்தபோது, ஒரு நபர் போன் செய்து வடமதுரை அருகே உள்ள ரயில் தண்டவாளம், திண்டுக்கல் அரசு மருத்துவமனை, திண்டுக்கல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதைகூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
செல்போனை டிராக் செய்த போலிஸ்
இதுகுறித்து, உடனடியாக வடமதுரை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், வடமதுரை காவல் துணை ஆய்வாளர் பிரபாகரன் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பின் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியதில் போன் செய்த நபர் திண்டுக்கல் நாகல் நகர் மேம்பாலத்தில் இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பழையூரைச் சேர்ந்த சந்திரசேகர் (32) என்பதும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அவர்தான் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
காப்பக்கத்தில் ஒப்படைப்பு
இதன்பின்னர், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து வெளியே சென்றவர், திண்டுக்கல் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.
அப்போதுதான் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதிசெய்த காவல் துறையினர், சந்திரசேகரை மீண்டும் அதே காப்பகத்தில் ஒப்படைத்தனர்.