திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள தர்மபுரி கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணின் புகைப்படத்தை போலியான பேஸ்புக் முகவரியில் தவறாக சித்தரித்து அவதூறு பரப்பப்பட்டுள்ளது. அதேபோல் சமூக வலைதளம் மூலம் அந்த பெண்ணிற்கு ஆபாச புகைப்படங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக அப்பெண்ணின் பெற்றோர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்த இளம் பெண்ணின் கிராமத்தையே சேர்ந்த அருண்குமார் என்பவரும் அவரது நண்பரான 17 வயது நபரின் செல்போனில் போலியான பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி அந்தப் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து ஆபாச படங்களை அனைத்தையும் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வு காவல் துறையினர் பெண்ணை இணையதளத்தில் தவறாக சித்தரித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக அருண்குமாரையும் 17 வயது சிறுவனையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து சிறுவனை மதுரை மத்திய சிறை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி சிறைக்கும் அருண்குமாரை திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலையிலும் அடைத்தனர்.
இதையும் படிங்க:
ஊரடங்கால் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் - அதிர்ச்சித் தகவல்!