சென்னை: தாம்பரம் பேருந்து நிலையம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட நபரை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த இருவர் அவரை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (59), மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக அவர் தாம்பரம் பேருந்து நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது, ரங்கநாதன் நேற்று (பிப்ரவரி 23) காலையில் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் பேருந்து நிலையத்திற்குச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, திண்டிவனம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த நபர்கள், அதே இடத்தில் தண்ணீர் பாட்டில் வாங்க காரை நிறுத்தியதாகவும், திடீரென அந்த கார் கண்ணாடியை ரங்கநாதன் தட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரங்கநாதனை தாக்கிய போது, பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக காரில் வந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் (31), ஆந்திராவில் எல்.எல்.பி இறுதி ஆண்டு படிக்கும் வினோத் (21) இருவர் மீதும் கொலை குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ரங்கநாதனுக்கு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ளதாகவும், அதில் முதல் மகன் இறந்துவிட்ட நிலையில், இரண்டாவது மகன் முருகன் ஓட்டுநராகவும், மூன்றாவது மகன் தினேஷ் பெயின்டிங் வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த ரங்கநாதன் போதைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு, கடந்த நான்கு வருடமாக கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆகையால், இரண்டாவது மகன் அவரை வீட்டிலேயே வைத்துப் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிப்ரவரி 19 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர், எங்கு சென்றார் எனத் தெரியாமல், அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இதற்கிடையே, நேற்று (பிப்.23) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குற்றப்பிரிவு காவலர் பால்ராஜ், சம்பவ இடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றித் திரிவதாகத் தாம்பரம் சரக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரங்கநாதனை அழைத்துப் பேசிக்கொண்டிருந்ததுடன், அவரது மகன் முருகனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது முருகனும் "தான் வந்து அழைத்துச் செல்வதாக" தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, போலீசார் ரங்கநாதனுக்கு தண்ணீர் மற்றும் டீ வாங்கிக் கொடுத்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது ஒரு கார் வந்து நின்றதாகவும், அந்த காரின் கதவை ரங்கநாதன் தட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாளையங்கோட்டை ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்!
அப்போது, காருக்குள் இருந்த மூவரில், இரண்டு பேர் கீழே இறங்கி வந்து ரங்கநாதனைத் தாக்கியுள்ளனர். "அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நபர், அவரை ஏன் அடிக்கிறீர்கள்" எனக் காவலர் கேட்டபோது, "அதைக் கேட்பதற்கு நீங்கள் யார், ரூ.30 லட்சம் கொடுத்து கார் வாங்கியுள்ளேன். இவர் வந்து காரை அடித்தால், விட்டுவிடுவோமா" எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, நாங்கள் வழக்கறிஞர் எனக் கூறி காவலருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட நபரை வினோத் தாக்கி தள்ளிவிட்ட போது, சுவற்றில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அவசர ஊர்தியில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள், ரங்கநாதனை சோதனை செய்தனர். அப்போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அதனால் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அருகே இருந்த ஆட்டோ மூலமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது, அவரது உயிரிழப்பை மருத்துவர்களும் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.