கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறை ஊராட்சியில் கடமான் கோம்பை, நீராடி, பரளிக்காடு, கீழ் பில்லூர், மேல் பில்லூர், செங்கலூர், சேத்துமடை, தோண்டை, பூச்சமரத்தூர், சிறு கிணறு, வீரக்கல், கோரப்பதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடமான்கோம்பை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (45). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் பில்லூர் அணைப் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்று உள்ளார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது சொந்த ஊரான கடமான் கோம்பைக்கு இலவச ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது, நீராடியில் வழியாக கடமான் கோம்பை செல்ல முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு பாதியிலேயே புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே சுமார் 3 கிமீ தொலைவிற்கு டோலி கட்டி கால்நடையாகவே தூக்கிச் சென்று தகனம் செய்து உள்ளனர். இது குறித்து பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், “அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே எங்கள் கிராமம் உள்ளது.
இங்கு முறையான சாலை வசதி ஏதும் செய்து தரப்படவில்லை. ரேஷன் பொருட்கள் வாங்க அல்லது அவசர தேவைக்காக மேட்டுப்பாளையம், காரமடை வருவதற்கு ஜீப்பைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இலவச அரிசியை வாங்க கூட காசு கொடுத்து தான் ஜீப்பில் செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏமாற்றும் வடமாநில இடைத்தரகர்கள்! பணம் பறிப்பு, பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் அவலம்!
அதுவும் மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜீப்பை ஓட்டுவது கடினம். அதனால், சில கிலோ மீட்டர் நடந்து தான் வரவேண்டி இருக்கும். அதன் பின்னர் தான் ஜீப் அல்லது பேருந்தில் ஏற முடியும். மேலும் இந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் எப்போது வன விலங்குகள் வரும் என்பது தெரியாது. நடந்து செல்லும் போது வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளதால் உயிருக்குப் பாதுகாப்பும் இல்லை. எனவே, அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.