ஆந்திர மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி தொப்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, லாரியைப் பின்தொடர்ந்து வந்த மற்றொரு டேங்கர் லாரியும் காரும், கவிழ்ந்த லாரியின் மீது மோதி சாலையில் நின்றது. இதில் லாரி ஓட்டுநர் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். காயடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. தொடர்ந்து மீட்புப் பணிகளுக்கு ஆள்கள் வராததால், சுமார் 20 மணி நேரமாக விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே உள்ளன.
நேற்றுமுதல் தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்யுமாறு காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொய்களைப் பரப்பி கொள்ளையடிக்கும் பாஜக அரசு - ராகுல் காந்தி