தர்மபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மக்னா யானை ஒன்று மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. இதனையறிந்த பொதுமக்கள் ஒகேனக்கல் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் மக்னா யானையின் உடலை மீட்டு, அதே இடத்தில் மருத்துவக் குழுவினரை வரவழைத்து உடற்கூராய்வு செய்தனர்.
உடற்கூராய்வு அறிக்கையில் மக்னா யானையின் உடலில் துப்பாக்கிக் குண்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கிகளை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் குறித்து வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது பென்னாகரம் அடுத்த மூங்கில்மடுவு பகுதியைச் சேர்ந்த சண்முகம், கமலேசன், குணசேகரன், சிவக்குமார் ஆகிய நான்கு பேர் நாட்டு துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு, இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் ஒகேனக்கல் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் மக்னா யானையை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து கமலேசன், குணசேகரன், சண்முகம், சிவகுமார் ஆகிய நான்கு பேரையும் ஒகேனக்கல் வனத் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து நான்கு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் குண்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோயில் மாயம்; ஐஜி பொன்மாணிக்கவேல் புகார்