தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மலர்விழி தலைமையில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி பேசுகையில், "தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்பட்சத்தில் இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் தங்கள் துறை சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பருவமழை காலத்தில் தேங்கும் மழைநீரால் டெங்கு கொசுக்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே சாலை, இதர இடங்களில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தொற்று நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து தகுந்த இடைவெளியை பின்பற்றி கவசம் அணிந்து கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.
மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வருவாய் துறையினர் ஆற்றின் கரையோரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை கண்காணித்து, மழை காலங்களில் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்வதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதி மக்கள் சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்களில் தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மின்சார துறையினர் மழைநீர் சூழ்ந்து நீர் வடியாமல் இருக்கும் பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக மின்சாரத்தை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
பலத்தகாற்று மழையினால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டால் அவற்றை சரி செய்ய தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான மின்கம்பிகள், மின் கம்பங்கள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
நீர்நிலைகள், தாழ்வான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குடிமராமத்து பணிகள் அதிக அளவில் நடைபெற உள்ளதால் ஏரிகுளங்கள் மற்றும் கொட்டைகளில் மழை நீரை அதிக அளவில் சேமிக்க வாய்ப்புள்ளது. ஏரி பகுதிகளில் அதிக அளவு ஆழம் உள்ள பகுதிகளை கண்டறிந்து எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் ஏரிகளில் குளிப்பதை தவிர்க்கவேண்டும்" என்றார்.