தருமபுரி மாவட்டம் இண்டூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (10), கோகுல் (7) ஆகிய இருவரும் அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இன்று குடியரசு தினத்தையொட்டி பள்ளிக்குச் சென்று குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட பின் இண்டூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இருவரும் தவறுதலாக ஏரியில் விழுந்துள்ளனர்.
தண்ணீரில் மாணவர்கள் தத்தளிப்பதை கண்டு உடனிருந்த மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். மாணவர்களை மீட்டபோது அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த மாணவர்களின் சடலத்தை மீட்ட இண்டூர் காவல்துறையினர், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இரண்டு மாணவர்கள் பரிதாபமாக ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.