தர்மபுரி: சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் இன்று இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளியில் சுகாதார சீர்கேடாக இருப்பதைக் கண்டறிந்து அப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவருடன் கழிவறைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார்.
அங்கு சென்றபோது கழிவறைக்கு வெளியே துர்நாற்றம் வீசியதால் தனது உதவியாளரிடம் தெரிவித்து கழிவறையை தூய்மை செய்யும் பிரஸ், ப்ளீச்சிங் பவுடர், பினாயில் வாங்கி வரச் சொல்லி பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் உடன் கழிவறையை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முன்னிலையில் தூய்மை செய்தார்.
தூய்மை செய்துவிட்டு, இதைப்போல தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்; ஏழை பள்ளி மாணவிகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்; அவர்களின் சுகாதாரத்தில் ஆசிரியர்கள் அக்கறை கொள்ள வேண்டும் என்றும்; கழிவறைக்கு பயன்படுத்தப்படும் பினாயில் போன்றவை இல்லை என்றால் எனக்குச் சொல்லுங்கள் தான் வாங்கித்தருகிறேன் என்றும் கூறினார். மேலும் தூய்மைப்பணியாளர்கள் வரவில்லை என்றால் கூறுங்கள்; நானே தூய்மையாக்கி விட்டுச் செல்கிறேன் என்றார்.
ஏழைப்பள்ளி மாணவிகளுக்கு சுகாதாரமான கழிப்பறை அவசியம் எனக்கூறி பள்ளிகளில் உள்ள கழிவறை கட்டடங்களை ஆய்வு செய்தார். அப்போது பள்ளிகளில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படாத கழிப்பறைகள் இருந்ததை கண்டறிந்தார். அப்பகுதி முழுவதும் கொசு அதிகமாக இருந்ததைக் கண்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொடர்பு கொண்டு பள்ளி முழுவதும் தூய்மையாக்க அறிவுறுத்தினார்.
இது குறித்து பேசிய தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், ’பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக உள்ளதால் பள்ளி மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தூய்மைப் பணியாளர்களை முறையாக பணி அமர்த்தி கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க பள்ளி ஆசிரியருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
பயன்படுத்தப்படாமல் உள்ள கழிப்பறைகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையைக் கட்டி, அதில் சானிடரி நாப்கின் சுகாதார முறையில் அப்புறப்படுத்தும் இயந்திரம் பொருத்தப்பட்டு, பள்ளி மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டப்பேரவையில் பேசினேன். இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் நேரடியாக சென்று முறையிட உள்ளேன்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காய்கறி விவசாயத்தில் கோடிகளில் லாபம் ஈட்டும் இளம்பெண்... வெற்றிகரமான விவசாயியாக மாறிய ஐடி ஊழியரின் கதை...