வடை என்றாலே..உளுந்த வடை, பருப்பு வடை, கீரை வடை, வெங்காய வடை போன்றவற்றை சாப்பிட்டு சலித்து விட்டதா? ஒரு முறை பச்சைப்பயறை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த வடையை செய்து பாருங்கள். பச்சைப்பயறு வடை எப்படி செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
- பச்சைப்பயறு - 1 1/2 கப்
- வெங்காய்ம் - 1
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - 1 சின்ன துண்டு
- கறிவேப்பிலை - 15
- கொத்தமல்லி - சிறிதளவு
- சோம்பு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கல் உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பச்சை பயறு வடை செய்முறை:
- முதலில், பச்சை பயறை நன்கு கழுவி சுடுநீரில் 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். இல்லையென்றால், இரவில் ஊற வைத்து காலையில் வடை செய்யலாம்.
- இப்போது, ஊறவைத்த பச்சைப்பயறில் இருந்து பாதியை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். பின்னர், மீதமுள்ள பச்சை பயறை மிக்ஸியில் சேர்த்து, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).
- இப்போது அரைத்த விழுதை அதே பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கைகளை பயன்படுத்தி கலந்து விடவும். சுவை பார்த்து தேவைப்பட்டால் தூள் உப்பு சேர்க்கவும்.
- அடுத்ததாக, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இப்போது, கையில் லேசாக எண்ணெய் தடவி, பிசைந்து வைத்த மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து, தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- ஒரு புறத்தில் பொன்னிறமாக வந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை பயறு வடை ரெடி..
பச்சைப்பயறு நன்மைகள்:
- உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியவசிய தேவையாக இருக்கும் புரதச்சத்து (Protein) பச்சைப்பயறில் நிறைந்திருப்பதாக 2019ம் ஆண்டு NCBI-ல் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
- அதனால், குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறை பச்சைப்பயறு கொடுத்து வரும் போது, எலும்பு மற்றும் நரம்பு மண்டலம் வலுப்பெறுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அனைத்து வயதுக்குட்பட்டவர்களும் வாரத்திற்கு இருமுறை எடுத்துக்கொள்ளும் போது, 40 வயதிற்கு மேல் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகள் தடுக்கப்படும்.
- வைட்டமின் ஏ, ஈ, சி, இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் பச்சைபயறில் நிறைந்துள்ளது. எனவே, இதனை அடிக்கடி உட்கொள்வதால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகை குணமாகும்.
- இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் தாதுச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், பச்சைப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் படிங்க:
பஞ்சு போன்ற இட்லிக்கு அரை கப் 'இதையும்' ஊற வைத்து அரைங்க..புசுபுசு இட்லிக்கு நாங்க கேரண்டி!
மீதமான சாதத்தில் 'மொறு மொறு வடை'..5 நிமிடம் இருந்தால் சுடச்சுட ஸ்நாக்ஸ் ரெடி!