தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகர் ஐந்தாவது வார்டு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
மழைநீரை அகற்ற பொதுமக்கள் பேரூராட்சிக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தொலைபேசியில் பொதுமக்கள் குறைகளை தெரிவித்தனா்.
அவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "அரூர் பெரியார் நகர் 5வது வார்டு பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான வசதி இல்லை. கால்வாய் செல்லும் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 20 ஆண்டு காலமாக இதுபோன்ற இன்னல்களை, இந்த பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
ஆனால் இந்தப் பகுதியில் இருக்கின்ற சட்டப்பேரவை உறுப்பினர் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனென்றால் இந்தப் பகுதியில் இருப்பவர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்பதால் அவர்களின் வாக்கு திமுகவுக்குதான் போடுவார்கள் என்று தெரியும்.
இங்கு கால்வாய் அமைப்பதற்கு தேவையான இடத்தை திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் வழங்க தயாராக உள்ளனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது ' - எம்.பி. சு. வெங்கடேசன்!